குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் சீசன் முழுவதும் ஏமாற்றி விட்ட நிலையில் ஜூலை மாத சீசனாவது கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாத தொடக்கத்தில் மூன்று தினங்கள் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் சற்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக கடந்த ஐந்து தினஙகளாக சாரல் இல்லாததுடன் வெயிலும் அடித்தது. இதனால் ஜூலை மாத சீசனும் ஏமாற்றிவிடுமோ என்று அஞ்சிய நிலையில் நேற்று இரவு ஆறுதலாக குற்றாலம், ஐந்தருவி, தென்காசி பகுதியில் சுமார் 3 மணி நேரம் பலத்த சாரல் மழை பெய்தது.
இதன் காரணமாக இரவு முதல் குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரி்த்துள்ளது. ஐந்தருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. பெண்கள் பிரிவில் உள்ள இரண்டு பிரிவுகளிலும் ஒன்றாக இணைந்து ஒரே மாதிரி பிரிவாக கொட்டியது. மெயினருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதேபோல் புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரி்த்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் குற்றால சீசன் மீண்டும் களை கட்டும் என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications