ஓட்டப்பிடாரத்தில் தான் வளர்ச்சிப் பணிகள் அதிகம்: டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கலெக்டர் பதில்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தான் அதிக அளவில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சந்தேகம் இருந்தால் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நேரில் வரலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு,
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தப்பாத்தி, மாப்பிள்ளையூரணி முகாம்களிலுள்ள 132 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் மீதமுள்ள 28 பெண்களுக்கு விரைவில் தையல் இயந்திரம் வழங்கப்படும்.
ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகைக்காக 8,394 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 6,419 மனுக்கள் உரிய தகுதி இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தகுதியுள்ள 1,975 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 701 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்வர் அறிவித்த திட்டங்களில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு தான் அதிக அளவில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் தெரிவிக்கலாம். அதில் குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக ஓட்டப்பிடாரத்தில் முதியோர் உதவித்தொகை கொடுக்கப்படவில்லை, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி அப்பகுதி எம்.எல்.ஏ.வும், புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கலெக்டர் ஆசிஷ் குமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications