விசாரணைக்கு அழைக்கப்பட்ட டெய்லர் காவல் நிலையத்தில் தற்கொலை-பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
சென்னை: வேலை செய்த வீ்ட்டில் காணாமல் போன கம்மல் குறித்த விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட தையல் தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தின் முன் முற்றிகை போராட்டம் நடத்தினர்.
சென்னை, நீலாங்கரையை அடுத்த கானத்தூர் அப்துல் கலாம் 3வது தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி கீதா. கடந்த 8ம் தேதி இவரது வீட்டில் கொசு வலை அடிப்பதற்காக பனையுரை சேர்ந்த தையல் தொழிலாளி ஹுமாயுன்(46), சவுகத்அலி(40) ஆகியோர் சென்றனர். பணிமுடிந்து இருவரும் வீடு திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த கம்மலை காணவில்லை என்று கீதா, தனது கணவரிடம் கூறியுள்ளார். இது குறித்து ஹூமாயுன், சவுகத் அலி ஆகியோரிடம் விசாரித்தனர். ஆனால் இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
ஆனால் பெருமாள்சாமி, கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக ஹுமாயுன், சவுகத்அலி ஆகியோரிடம் போலீசாரிடம் விசாரித்தனர். இதில் ஹுமாயுனை மட்டும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
இந்த நிலையில் இரவு 12 மணியளவில் ஹுமாயுனின் மனைவி யாஸ்மினை தொடர்பு கொண்ட போலீசார், விசாரணைக்கு வந்த ஹுமாயுன் தீக்குளித்துவிட்டதாகவும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரை எடுத்து செல்வதாகவும் கூறினர்.
இதில் அதிர்ச்சியடைந்த யாஸ்மின், மருத்துவமனைக்கு சென்ற போது, ஹுமாயுன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அறிந்த த.மு.மு.க.வினரும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சேர்ந்து, கானாத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றியி்ட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த இணை போலீஸ் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் உமாசங்கர் ஆகியார் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல் நிலையத்தில் எப்படி மண்ணெண்ணெய் கேன் வந்தது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு போலீஸ் அதிகாரிகள், மண்ணெண்ணெய் ஒரு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருந்ததாக தெரிவித்தனர். இந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீவைத்து கொண்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஹுமாயுன் ஓடியதாக தெரிகிறது.
தீக்குளித்து ஓடிய ஹுமாயுனை காப்பாற்றிய போலீசார், தீயை அணைத்து தீக்காயங்களுடன் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹுமாயுன் பலியானார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல் நிலையத்தின் முன்பாக முற்றிகை போராட்டம் நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications