போலி கையெழுத்து விவகாரம்- பிரணாப் மனுவை பரிசீலனை செய்யக் கோரும் சங்மா கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை பரிசீலனை செய்யக் கோரும் மற்றொரு வேட்பாளர் சங்மாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார்.
வேட்புமனு பரிசீலனையின் போது பிரணாப் முகர்ஜியின் மனு மீது சங்மா ஆட்சேபம் தெரிவித்திருந்தார். வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் பதவியில் நீடிக்கிறார் என்பது சங்மாவின் புகாராக இருந்தது. இதனால் வேட்புமனு பரிசீலனை ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் விசாரணையின்போது பிரணாப் அவர் வகித்து வந்த இந்திய புள்ளியியல் நிறுவனத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த ராஜினாமா கடிதத்தில் இருப்பது பிரணாப் முகர்ஜியின் கையெழுத்தே அல்ல என்று சங்மா தரப்பு வாதிட்டது. இதை தேர்தல் அதிகாரி அக்னிகோத்ரி நிராகரித்தார்.
ஆனாலும் சங்மாதரப்பு விடுவதாக இல்லை. தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரத்தை முறையீடு செய்தது சங்மா தரப்பு.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எழுப்பப்படும் அனைத்து சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து உச்சநீதிமன்றம்தான் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனத்தின் 71 (1)-வது பிரிவில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. எனவே அந்த பிரிவின்படி பி.ஏ.சங்மா சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு பரிசீலனைக்கு உகந்தது அல்ல என்பதால் நிராகரிக்கப்படுகிறது.
மேலும், 1952-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் தொடர்பான சட்டத்தின் 3-வது பகுதியில் உள்ள 14-வது பிரிவிலும் அந்த தேர்தல்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகளை தேர்தல் வழக்கு மூலம் உச்சநீதிமன்றத்தில்தான் எழுப்ப முடியும் என்று கூறப்பட்டு உள்ளது. வேட்பாளரின் வேட்புமனு தவறாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் வெற்றி பெற்று இருப்பாரேயானால் 18-வது சட்டப்பரிவின்படி அவரது வெற்றி செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவிக்கும். தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட வேட்பாளர் (பிரணாப் முகர்ஜி) தாக்கல் செய்த மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது 18-வது சட்டப்பிரிவின்படி தவறானது என்று மனுதாரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், தேர்தலின் போது சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி தனக்கு உள்ள அதிகாரத்தின்படியோ அல்லது அரசியல் சாசனம் மற்றும் சட்ட விதிமுறைகளின்படியோ செயல்படாத போது, அதனால் ஏற்படும் தவறுகளை நிவர்த்தி செய்ய அரசியல் சாசனத்தின் 324-வது பிரிவின்படி தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். தேர்தல் தொடர்பாக எழும் சில பிரச்சினைகளை கையாள தெளிவான சட்ட அம்சங்கள் இல்லாத போது தான், அரசியல் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. எனவே இந்த பிரச்சினையில் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.