உ.பி. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு பாய்கள், துப்புரவுத் தொழிலாளிகள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாபு பனார்சி தாஸ் மாவட்ட மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் நோயாளிக்கு தையல் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் புலாந்த்ஷாஹரில் உள்ளது பாபு பனார்சி தாஸ் மாவட்ட மருத்துவமனை. அங்கு 23 டாக்டர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் அங்கு சிறுவன் ஒருவனின் காலில் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் தையல் போடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வார்டு பாய் ஒருவர் இன்னொரு நோயாளிக்கு டெடனஸ் ஊசி போட்டதும் தெரிய வந்துள்ளது.
ஆனால் அவர்கள் துப்புரவுத் தொழிலாளியும், வார்டு பாயும் கிடையாது என்றும், அவர்கள் ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவி்த்துள்ளது.
ஆனால் இந்த விவகாரம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.ஹெச்.எஸ். தாணு கூறுகையில்,
அந்த வீடியோவில் வரும் வார்டு பாய் கடந்த 10 ஆண்டுகளாக ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்களுக்கு உதவியாக உள்ளார். அவர் என் கண்காணிப்பில் தான் பணிபுரிந்தார். சில நேரம் நோயாளிகளை கவனிக்க யாருமில்லை என்றால் அவர்கள் மருந்துகள் கொடுத்து உதவுவார்கள் என்றார்.
இந்நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அகமது ஹசன் கூறுகையில், அந்த மருத்துவமனைக்கு திடீர் என்று ஏராளமான நோயாளிகள் வந்தனர். அப்போது போதிய டாக்டர்கள் வேறு இல்லை. நோயாளிகளைக் கவனித்தது துப்புரவுத் தொழிலாளிகளா அல்லது வார்டு பாய்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
இந்நிலையில் பாலியா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிக்கு துப்புரவுத் தொழிலாளி ஒருவர் தையல் போட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications