இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு: 6.5 லட்சம் பேர் எழுதுகிறார்கள்- பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி புதுவை மற்றும் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தனியார் பள்ளிகள் உள்பட எந்த பள்ளியிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும். இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 1,027 மையங்களில் நடக்கும் தகுதித் தேர்வை 6.56 லட்சம் பேர் எழுதுகின்றனர். இன்று காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மையங்களுக்கு வர வேண்டும். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது.
தமிழகத்தில் 23.08.2010 மற்றும் அதற்கு பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களும் இந்த தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications