கோபால் கிருஷ்ண காந்தியை துணை ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்பும் மமதா
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியையே நிறுத்துவது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் ஹமீது அன்சாரியை ஆதரிக்க மறுத்துள்ளது. மேலும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தியை வேட்பாளராக்குவதில் திரிணாமூல் காங்கிரஸ் குறியாக உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியை எப்படி சமாதானம் செய்வது என்று அறியாமல் திணறுகிறது.
வரும் சனிக்கிழமை டெல்லியில் நடக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொள்ளும் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபால் கிருஷ்ண காந்தி பெயரை பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மமதா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு தனது ஆதரவு யாருக்கு என்பதை அறிவிப்பதாக மமதா தெரிவித்தார்.