நாங்கள்ளாம் வர மாட்டோம், எங்க வக்கீலுங்கதான் வருவாங்க... மதுரை ஆதீனம்
மதுரை: கோர்ட்டுக்கெல்லாம் ஆதீனங்கள் வர மாட்டார்கள். எங்கள் மீதான வழக்கிலும் கூட எங்களது சார்பில் வக்கீல்கள்தான் ஆஜராவார்கள். நாங்கள் போக மாட்டோம் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
கொடைக்கானல், திருவண்ணாமலை என ரவுண்டு அடித்துக் கொண்டிருந்த நித்தியானந்தா நேற்று ராத்திரி திடீரென மதுரைக்குத் திரும்பினார். மதுரை ஆதீனத்துடன் தீவிர ஆலோசனை நடத்திய பின்னர் இன்று முற்பகலில் மீண்டும் மலையேறி விட்டார்.
இடையில் நித்தியானந்தா ஊரில் இல்லாத நேரத்தில் செய்தியாளர்களைக் கூப்பிட்டு தெளிவாகப் பேசிய மதுரை ஆதீனம், அமெரிக்க கோர்ட்டில், நித்தியானந்தாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் உடனே அவரது நியமனத்தை மறு ஆய்வு செய்வேன் என்று தடாலடியாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று நித்தியானந்தா வந்தவுடன் மதுரை ஆதீனத்தின் பேச்சில் 'டோன் சேஞ்ச்' காணப்பட்டது. கலிபோர்னியா தீர்ப்பு குறித்து மாலைமலருக்கு மதுரை ஆதீனம் அளித்த பேட்டியில்,
அமெரிக்கா கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வருகிற 19-ந்தேதி வெளிவருகிறது. இந்த வழக்கு நித்தியானந்தாவுக்கு எதிரானது அல்ல. அமெரிக்காவில் உள்ள தியான பீடத்தின் 2 பக்தர்களுக்கு இடையே உள்ள வழக்கு. தியான பீடத்திற்கு எதிராக தீர்ப்பு வந்தால் அபராதம் கட்டும் சூழ்நிலை ஏற்படும். ரூ.8 கோடி வரை அபராத தொகை இருக்கும். இதனை கட்ட தயாராக இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை மாவட்ட கோர்ட் அனுப்பியுள்ள சம்மனை பெற்றுள்ளோம். நித்தியானந்தாவும் பெற்றுள்ளார். பொதுவாக மதுரை ஆதீனங்கள் கோர்ட்டில் ஆஜரானதில்லை. எங்கள் தரப்பில் நியமிக்கப்பட்ட வக்கீல்கள் ஆஜராகி எங்கள் தரப்பு நியாயங்களை கோர்ட்டில் விளக்குவார்கள். அதன்படி வருகிற 24-ந்தேதி வக்கீல்கள் எங்களது சார்பில் ஆஜராவார்கள் என்றார் அமைதியாக.
அடிக்கடி மதுரை ஆதீனம் டோனை மாற்றிப் பேசுவது அவரது ஆதரவாளர்களையே பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications