நாடாளுமன்றம் கூடுகிறது- பிரதீபா பாட்டீலுடன் மன்மோகன்சிங் ஆலோசனை
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்..
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் 30-ந் தேதி நடைபெறும் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலும் வரும் 19 -ந் தேதியும் ஆகஸ்ட் 7-ந் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நிதி அமைச்சராகவும் அவை முன்னவராகவும் இருந்த பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதால் புதிய அமைச்சரும் அவை முன்னவரும் நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது.
அனேகமாக சுசில்குமார் சிண்டே, அவை முன்னவராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்றைய நாளில் மழைக்கால கூட்டத்தொடரை தொடங்க வாய்ப்புள்ளது. இதனிடையே நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இச்சந்திப்பில் மழைக்காலக் கூட்டத் தொடர் பற்றியும் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications