துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு: இன்று மாலை கூடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டம்

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியையே நிறுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் ஹமீது அன்சாரியை ஆதரிக்க மறுக்கிறது. இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் இறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நெடுங்காலமாக புறக்கணித்து வந்த திரிணாமூல் காங்கிரஸ் இன்று நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறது. அக்கட்சி சார்பில் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய் கலந்து கொள்கிறார். அவர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி பெயரை பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அளித்த ஆதரவு போன்று துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்விலும் அளிக்க வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications