நேபாள பிரதமர் பொறுப்பிலிருந்து பாபுராம் பதவி விலகமாட்டார்: மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா
காத்மாண்டு: நேபாள பிரதமர் பாபுராம் பட்டராய் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா நிராகரித்துவிட்டார்.
நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்றது. மாவோயிஸ்ட் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அரசியல் சாசனம் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இப்போது பிரதமராக இருக்கும் பாபுராம் பட்டராய் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெறும் ஐக்கிய அரசு ஏற்படுத்தப்பட்டு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரசண்டா, நாடு இப்போது இருக்கும் சூழலில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு பிறகு ஐக்கிய அரசை உருவாக்குவது என்பது சாத்தியமில்லாதது என்றும் அவர் கூறினார்.
நேபாள நாடாளுமன்றத்தில் மொத்தம் 601 உறுப்பினர்கள் உள்ளனர். 2008-ம் ஆண்டிலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அரசியல் சாசனம் உருவாக்குவதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் கடந்த மே 27-ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 22-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் பாபுராம் பட்டராய் அறிவித்துள்ளார்.
இப்போதைய சூழலில் பிரதமர் பாபுராம் பட்டராய் பதவி விலகினால், அதிகார மையத்தில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகும். அரசியல் சாசனம் வகுப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே எவ்விதமான மாற்று ஏற்பாடும் இல்லை. தேர்தல் நடத்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்நிலையில் அரசியல் சாசனம் வகுக்கப்படாமல் பிரதமரை பதவி விலகச் சொல்வது சரியான முடிவாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications