சிவகிரி ஜமீன் சொத்து : மேலும் 126 வாரிசுகளும் வழக்கில் இணைக்கக் கோரி மனு

சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர் என்ற உரிமையில் ஜெகநாதன் என்பவர் மனுத்தாக்கல் செய்து சொத்துகளை நிர்வகிப்பதற்காக அங்கீகாரக் கடிதத்தை 2004-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்திடம் இருந்து பெற்றார். பின்னர் சுவிஸ் வங்கியில் இருக்கும் சொத்துகளுக்கான பொது அதிகாரத்தை காசினா என்பவருக்கு ஜெகந்நாதன் கொடுத்தார்.
இந்நிலையில் சிவகிரி ஜமீனின் வாரிசுகளில் ஒருவரான பத்மினிராணி தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் ஜெகநாதனுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரக் கடிதம் ரத்துசெய்யப்பட்டது.
இந்த ரத்து உத்தரவுக்கு எதிராக ஜெகநாதன் மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த வழக்கில் பொது அங்கீகாரக் கடிதம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இதுவரை அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இதனால் ஜெகநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நெல்லையைச் சேர்ந்த செந்தட்டி வீரம்மாள் நாச்சியார் என்ற குமாரி, ராஜபாளையம் தெற்கு வெங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சி.மவுனகுருசாமி உட்பட 126 பேர் தங்களை வாரிசுகளாகக் காட்டி, அந்த வழக்குகளில் தங்களை இணைத்து விசாரிக்க வேண்டும் என்று புதிய மனுத்தாக்கல் செய்துள்ளன.
சிவகிரி ஜமீன் சொத்துக்கள் தொடர்பாக செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத்தம்பியார் தொடர்ந்த வழக்கில், சொத்துகளை 6 பேருக்கு பிரித்து அளிக்கும்படி 1914-ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த 6 பேரின் வாரிசுகளாக வருவதாக 126 பேரும் கூறியுள்ளனர்.
இந்த வழக்குகளில் சிலரை இணைத்து விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருப்பதால் தங்களுக்கும் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
சிவகிரி ஜமீனின் சொத்துகள் தொடர்பாக என்.ஜெகநாதன் பெற்ற அங்கீகாரக் கடிதம் மற்றும் உயில் குறித்த குறுக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்த மனுக்கள் மீதும் நாளை விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications