ராணுவத்தைப் போல் ஆயுத பரிசோதனைக்காக சோதனைக் கூடங்களை அமைத்திருக்கும் மாவோயிஸ்டுகள்
டெல்லி: நாட்டின் ராணுவத்தைப் போல ஆயுதங்களைப் பரிசோதிக்க சோதனைக் கூடங்களை சத்தீஸ்கர் காடுகளில் மாவோயிஸ்டுகள் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ராமகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாவோயிஸ்டுகளின் ஆயுத பலம் பற்றி பல தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அத்தகவலின் அடிப்படையில் ராக்கெட் லாஞ்சர்ஸ், கிளைமோர் குண்டுகள், கண்ணிவெடிகள் ஆகியவற்றை தயாரித்து பரிசோதிப்பதற்கு என தனியாக அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சோதனைக் கூடங்களை சத்தீஸ்கர் காட்டில் மாவோயிஸ்டுகள் அமைத்திருக்கின்றனர். இந்த சோதனைக் கூடத்தில் புதிய ரக ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனைக் கூடங்களை பல கோடி ரூபாய் செலவில் மாவோயிஸ்டுகள் அமைத்திருக்கின்றனராம்..
அண்மையில் 22 டிரக்குகள் நிறைய ஆயுத தயாரிப்புக்கான உபகரணங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சத்தீஸ்கர் சோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் எந்த இடத்தில் இந்த சோதனைக் கூடங்கள் அமைந்திருக்கின்றன என்பதைக் கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அமைப்புகள் தீவிரம்காட்டி வருகின்றன.