ரூ.10 கோடி மதிப்புள்ள இரிடியம் ரூ.10 லட்சத்திற்கு தருவதாக மோசடி முயற்சி: 3 பேர் கைது
சென்னை: ரூ.10 கோடி மதிப்புள்ள இரிடியம் என்ற ரசாயனப் பொருளை, ரூ.10 லட்சத்துக்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற தீயணைப்பு வீரர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பத்மனாபன்(40). கார் ஓட்டுநர். இவரை சந்தித்த 3 பேர் இரிடியம் என்ற ரசாயனப் பொருளை விற்பதாக தெரிவித்தார். மேலும் ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த ரசாயனப் பொருளை ரூ.10 லட்சத்திற்கு தருவதாக கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த பத்மனாபன், இது குறித்து சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது,
இரிடியம் என்ற ரசாயனப் பொருள் அணுமின் நிலையங்கள், ராக்கெட் ஏவுகணைதளம், புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றிற்கு பயன்படும் அதிக விலை மதிப்பு கொண்ட ரசாயனப்பொருள் ஆகும். இதை சாதாரண நபர்கள் யாரும் பயன்படுத்த முடியாது.
இந்த ரசாயனப் பொருள் தங்களிடம் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.10 கோடி என்றும், அதை எனக்கு ரூ.10 லட்சத்துக்கு தருவதாகவும் 3 மர்மநபர்கள் கூறுகின்றனர். அவர்கள் மோசடி நபர்கள் போல் தெரிகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் விசாரித்தார். இந்த நிலையில் அடையாறு ஆவின் பூத் அருகே நின்று கொண்டிருந்த 3 பேரிடம், மாறுவேடத்தில் இருந்த போலீசார் விசாரித்தனர். இதில் இரிடியம் ரசாயனப் பொருள் இருப்பதாக கூறிய நபர்கள் அவர்கள் தான் என்று தெரிந்தது.
மேலும் மாறுவேடத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ரியாசுதீனிடம், பிளாஸ்டிக் பெட்டி ஒன்றை காட்டி, அதில் இரிடியம் ரசாயனப் பொருள் இருப்பதாக கூறினர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மைலாப்பூரை சேர்ந்த மோகன்(38), திருவல்லிகேணியை சேர்ந்த குமார், திருவான்மியூரை சேர்ந்த ராஜா ஆகியோர் என்பது தெரிந்தது. இதில் மோகன் துறைமுகம் தீயணைப்பு துறையில் பணியாற்றுபவர். மற்ற இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள் இரிடியம் தானா என்பதை அறிய, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications