காரில் லிப்ட் கொடுத்த மாணவியை கட்டிப் பிடித்து முத்தமிட்ட இளைஞர் கைது!
சென்னை: சென்னை அடையாரில் கல்லூரி மாணவியை கட்டிப் பிடித்து முத்தமிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லதா. 22 வயதாகும் இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் புதிதாக கார் வாங்கினர். அந்தக் காரை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு கிளம்பினார்.
அடையார், கஸ்தூரிபாய் நகர் வந்த அவர் 3வது கிராஸ் தெருவில் காரை ஓட்டி வந்தபோது திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதனால் கார் நின்று விட்டது. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அவர் என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த கால் டாக்சி டிரைவரான 24 வயதான மோகன் என்பவர், உதவி செய்வதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய லதா, காரில் பெட்ரோல் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு மோகன், அருகில் இருந்த ஒரு பெட்ரோல் பங்குக்குப் போய் கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். பின்னர் அதை லதாவின் காரில் ஊற்றினார். அதற்கு லதா நன்றி சொன்னார். அப்போது, மோகன், தனது கார் அருகில் நிற்பதாகவும், தன்னை அங்கே இறக்கி விட்டு விட முடியுமா எனறு லதாவிடம் கேட்டார். அதற்கு உடனே சரி என்று கூறினார் லதா.
பின்னர் லதா காரை கிளப்ப, பின் இருக்கையில் அமர்ந்திருந்த மோகன், லதா எதிர்பாராத நேரத்தில், பின்னாலிருந்து லதாவை கட்டிப்பிடித்தார். பின்னர் அவரது முகத்தில் முத்தமிடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த லதா உடனே காரை நிறுத்தி விட்டு உதவி கோரி கத்தினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தோர் ஓடி வந்தனர். காருக்குள் இருந்த மோகனை வெளியே இழுத்து சரமாரியாக அடித்தனர். அவரை விசாரித்தபோது திருவாரூரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பின்னர் அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
லதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் மோகனைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications