சென்னையில் கேரள நர்ஸை சீரழித்த 2 கேரள டாக்டர்களும் பெரம்பலூரில் சிக்கினர்
சென்னை: சென்னையில் ஒரு விருந்தினர் இல்லத்தில் வைத்து கேரளாவிலிருந்து பயிற்சிக்காக வந்த 19 வயது நர்ஸை 2 நாட்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடிய 2 கேரளத்து டாக்டர்களையும் பெரம்பலூரில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை தற்போது சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த 19 வயதான நர்ஸ் ஒருவர் பயிற்சிக்காக திருச்சியில் உள்ள கேரள ஆயுர்வதே வைத்திய மையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அவரை சென்னை கிளைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை வந்த அவரை டாக்டர்கள் அஜில்குமார் மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் 2 நாட்கள் விருந்தினர் இல்லத்தில் வைத்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அப்பெண்ணை குளிக்கும்போது வீடியோவிலும் ரகசியமாக படம் பிடித்துள்ளனர்.
அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தப்பிஓடிய இரு டாக்டர்களையும் தேடி வந்தனர். இந்த நிலையில் இரு டாக்டர்களும் பெரம்பலூரில் வைத்து சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் தற்போது சென்னைக்குக் கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.