ஹாஸ்டல் கேன்டீன் விவகாரம்: மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் அதிக அளவில் உணவு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக விடுதியில் சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். அங்கு தங்கியுள்ள மாணவ, மாணவிகளிடம் உணவு கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விடுதி கேன்டீனை தனியார் நிறுவனம் ஒன்றிடம் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்படைத்தது.
இந்த தனியார் உணவு நிறுவனம் உணவு கட்டணத்தை ரூ.2,500க உயர்த்திவிட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் விடுதி கேன்டீனை பல்கலைக்கழக நிர்வாகமே மீண்டும் ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் அறையை அவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அப்போது மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டதாகவும், ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் ஆதரவு அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications