ஜப்பான் செல்கிறார் மோடி- சிக்கலில் மாட்டிய மாருதி கார் நிறுவனம் குஜராத்துக்கு மாறுமா?

மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபமாகி போர்க்களமானது அப்போது டாடா நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சாட்சாத் குஜராத் மாநிலம்தான்.
இதேபோன்ற இன்னொரு சிவப்புக் கம்பளத்தை குஜராத்தின் மோடி அரசு தயார் செய்து கொண்டிருக்கிறது... யாருக்காக என்கிறீர்களா?
ஹரியானா மாநிலத்தில் பெரும் சர்சையில் சிக்கியிருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்துக்குத்தான்.
ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள மாருதி கார் தயாரிப்பு தொழிற்சாலையில் பெரும் கலவரம் வெடித்து அதன் அதிகாரிகளில் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும் கார் உற்பத்தி முடங்கிப் போய்விட்டது.
இந்நிலையில் ஹரியானா மாநில அரசுக்கு ஜப்பான் அரசு கடந்த வியாழக்கிழமையன்று கடுமையாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மாருதி நிறுவனத்தில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மோடியின் ஜப்பான் பயணம்
இதே நேரத்தில் இன்னொரு சுவாரசியமும் நடந்து கொண்டிருக்கிறது..
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள்ளார். அவர் நாளை ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருப்பார். அனேகமாக இந்த பயணத்தின் போது ஹரியானாவிலிருந்து மாருதி நிறுவனத்தை குஜராத்துக்கு நகர்த்திக் கொண்டு வரும் முயற்சியில் மோடி வெற்றி பெற்றுவிடுவார் என்றே கூறப்படுகிறது. இதற்காக சுசுகி நிறுவனத்தின் தலைவரை நேரில் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
ஹரியானாவில் மாருதி கார் தொழிற்சாலை விவகாரமும் மோடியின் ஜப்பான் பயணமும் இந்திய தொழில்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் மாருதி கார் விவகாரத்துக்குப் பின்னர்தான் மோடி ஜப்பான் செல்கிறார் என்பதை குஜராத் அரசு நிராகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications