காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையும், காவிரி கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அதன் பின்னர் பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று மே 18-ந் தேதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடங்காத காரணத்தால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரையும் கர்நாடகம் வழங்கவில்லை. இதுபோன்ற குறிப்பிட்ட வறட்சிக் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்தும் ஒப்பந்தத்தில் தனியாக குறிப்பிடவில்லை.
2012-13-ம் ஆண்டுகளில் கர்நாடகத்தின் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை குறைவாகக் காணப்பட்டாலும், கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 20-ம் தேதி) வரை 21.9 டி.எம்.சி. தண்ணீர் வந்தது. ஆனால், கர்நாடக அரசு இந்த நீரை தமிழகத்துக்கு வழங்காமல் 4 அணைகளிலும் தேக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் உள்ள நீரை அந்த மாநில பாசனத்துக்காக கர்நாடக அரசு தொடர்ந்து வெளியேற்றி வருகிறது.
இதனால் காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி ஜூலை 20-ம் தேதி வரை தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய 36.15 டி.எம்.சி. நீர் கிடைக்கவில்லை. இதனால், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இன்னமும் திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் 45 சதவீத சாகுபடி காவிரி நீரால் மேற்கொள்ளப்படுகிறது. பருவ மழையைக் காரணம் காட்டி, இது போன்ற வறட்சிக் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்காமல் இருக்கக் கூடாது. இதனால், தமிழகத்தின் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். நாட்டுக்குத் தேவையான உணவு தானிய உற்பத்தி குறையும்.
ஆகையால், இந்த வறட்சி காலத்தில் தனது அணைகளில் நீரை சேமித்து வைப்பதைத் தவிர்த்து, தற்போதுள்ள நீர்வரத்தை வைத்தே தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி கண்காணிப்புக் குழு அளித்துள்ள உத்தரவை நிறைவேற்ற உதவும் வகையில், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும். 24-வது காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காவிரி நதி நீர் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 1991-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளையும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதங்களையும் தமிழக அரசு தனது மனுவில் இணைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications