ஈழத்து அகதிகளை கையாளும் அதிகாரத்தை க்யூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும்: சீமான் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத்து அகதிகளைக் கையாளும் அதிகாரத்தை கியூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புழல் ஈழ அகதிகள் முகாமில் இருந்து வந்த 6 பேரை ஜூலை 1ம் தேதி தமிழக காவல்துறையின் கியூ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் ஒரு வண்டியில் ஏற்றி சென்னை கடற்கரை சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை என்ற பெயரில் அவர்களை அடித்து துன்புறுத்தினர். அவர்களில் 4 பேரை அன்று நள்ளிரவே விடுவித்துவிட்டு 2 பேரை மட்டும் நீதிபதி முன்பு நிறுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

ராமச்சந்திரன் என்கிற ரமேஷ், காந்தி மோகன் என்கிற சுதர்சன் ஆகிய இருவர் மீதும் சாட்டிலைட் டெலிபோன் வைத்திருந்தார்கள், ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல பணம் திரட்டினார்கள் என்று குற்றம் சாட்டி வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட காந்தி மோகன், ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று அவர்கள் விடுவிக்கப்பட இருந்த நிலையில் காலை 5 மணிக்கே சிறைக்கு வந்து, மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, அந்த இருவரையும் செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாமிற்கு கொண்டு சென்று அடைத்துள்ளது கியூ பிரிவு.

இது முழுக்க, முழுக்க சட்டத்திற்குப் புறம்பான, நீதியற்ற நடவடிக்கையாகும். இந்த இருவரும் நீதிமன்றக் காவலில் இருந்தபோதே விசாரணை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு, இப்போது மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது என்பது சித்ரவதை செய்யவே தவிர, வேறு காரணிகள் இல்லை. தமிழக காவல் துறையின் கியூ பிரிவு செய்து வரும் இப்படிப்பட்ட அராஜகங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவே கடந்த 11ம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாம் மறியல் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். ஆனால் அந்த போராட்டத்திற்குப் பிறகும் கியூ பிரிவின் இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கை தொடர்கிறது.

இந்த நாட்டில் வாழும் திபெத் அகதிகளும், பர்மா அகதிகளும் சீருடனும் சிறப்புடன் முழு உரிமையுடன் பாதுகாப்பாக வாழ்ந்து வருகையில், நமது ஈழத் தமிழ் சொந்தங்கள் மட்டும் அவமானப்படுத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் அலைக்கழிக்கப்படுகின்றனர். அவர்களை துன்புறுத்துவதற்காகவே சிறப்பு முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் தனிமைச் சிறைக் கூடங்களை கியூ பிரிவு பயன்படுத்தி வருகிறது. இதற்கு மேலும் தாமதிக்காமல், இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு சிறப்பு முகாம்களை இழுத்து மூடி, அதில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும், ஈழத்து அகதிகளை கையாளும் அதிகாரத்தை கியூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+