ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு ஒரு ஆண்டில் 52 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக 33 நாட்களும், மருத்துவ விடுப்பாக 18 நாட்களும், தற்செயலாக விடுப்பாக 18 நாட்களும் அளிக்கப்படுகிறது. பண்டிகை விடுமுறையாக 10 நாட்கள் உள்ளன. இந்த வகையில் ஆண்டிற்கு மொத்தம் 125 விடுமுறை உள்ளது. மீதமுள்ள 240 நாட்கள் மட்டுமே அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால், பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர், அதில் பணிக்கு தவறாமல் வருபவர்கள், வராமல் இருப்பவர்கள் போன்றவை குறித்து ஆய்வு நடத்துமாறு, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிவது தெரியவந்தது. இதில் கடந்த 2011 ஜூன் முதல் 2012 ஜூன் வரை 2,354 ஊழியர்கள் 80 நாட்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.
795 ஊழியர்கள் ஒருநாள் கூட வேலைக்கு வரவில்லை. இதில் 200 ஊழியர்கள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஒரு வருடமாக பணிக்கு வராமல் இருக்கும், ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நோட்டீஸ் பெற்றும், அதற்கு தகுந்த விளக்கம் அளிக்காவிட்டால் அவர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு பணிமனைகள் பற்றாக்குறை காரணமாக, பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழகம் முழுவதும் புதிதாக 46 பணிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் இவற்றை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications