கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு இனிமேல் எதிர்காலம் இல்லை: தனியரசு
கரூர்: கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும், பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கும் இடையே பெரிதாகி வருகிறது. கொமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை ஈஸ்வரன் மோசடி செய்துள்ளதாக பெஸ்ட் ராமசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், கொ.மு.கவின் நிறுவன தலைவர் நான் தான். கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் நிறுவன துணைத் தலைவரும் நான் தான். மேலும் இந்த இயக்கத்துக்கு ஈஸ்வரனை கொண்டு வந்ததும் நான் தான். அவரை நம்பி கட்சியில் செயல்பட விட்டேன். ஆனால் அவர் கட்சியை கைப்பற்ற முடிவு செய்ததோடு, என்னை கட்சியை விட்டு நீக்கவும், என்னை எதுவும் செய்யவும் துணிந்து விட்டார்.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தொடர்ந்து செயல்படும். என்னை தலைவராக ஏற்றுக் கொள்பவர்கள் இதில் இருக்கலாம். எனது தலைமை பிடிக்காவிட்டால் சென்று விடலாம். ஈஸ்வரனும் இருந்தால் இருக்கட்டும். என்னை பிடிக்காவிட்டால் வெளியேறி விடலாம் என்றும் பெஸ்ட் ராமசாமி கூறியிருந்தார்.
இந் நிலையில் கொங்குநாடு முன்னேற்ற கழக எம்எல்ஏவும், கொங்கு நாடு இளைஞர் பேரவை நிறுவனருமான தனியரசு கரூரில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 14 மாதங்களில் தமிழகத்தில் ஜாதி கலவரம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. காவிரிப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் மத்திய அரசுடன் சமரசம் செய்து கொள்ளாமல் தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுக்காமல் முதல்வர் போராடி வருகிறார்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொங்கு இளைஞர் பேரவை வேகமாக வளர்ந்து வருகிறது. வணிக நோக்குடன் தொடங்கப்பட்ட கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு தமிழகத்தில் இனி எதிர்காலம் இல்லை. அந்த அளவுக்கு மக்கள் அதை புறக்கணித்து விட்டனர்.
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் இனிமேல் அரசியல் நடத்த முடியாது. பல மாவட்டங்களில் உள்ள கொ.மு.க. தொண்டர்கள் கொங்கு இளைஞர் பேரவையில் சேர்ந்து வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications