நெல்லையப்பர் கோவிலில் ரூ.65 லட்சத்தில் சூரிய ஒளி மின்சார திட்டம்
நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் ரூ. 65 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உபயமாக செயல்படுத்த உபயதாரர்கள் முன்வந்துள்ளனர்.
நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் 600 மின் விளக்குகள் வரை உள்ளன. இதனால் 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை, திருவிழாக்காலங்களில் ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மாதத்திற்கு 17,000 யூனிட் வரையிலும் மின்சாரம் செலவாகிறது. இவ்வளவு மின்சாரம் செலவாவதை கட்டுப்படுத்த சூரிய ஒளியினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நெல்லையப்பர் கோவிலுக்கு ரூ. 65 லட்சம் செலவில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஆதிசிவஞானம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகேசன், முத்துக்குமார் ஆகியோர் உபயமாக செய்து தர முன்வந்துள்ளனர். இதற்கான அனுமதி கோரி நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடமும், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் நெல்லையப்பர் கோவிலில் 2 மாதத்திற்கு ஒருமுறை செலவாகும் 17,000 யூனிட் மின்சாரத்தில் 80 முதல் 90 சதவீதம் வரை மிச்சமாகும். மேலும் ரூ.55,000ல் இருந்து ரூ.60,000 வரை செலுத்தப்படும் மின் கட்டணத்தில் 10 முதல் 20 சதவீதம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
அறநிலையத்துறை அனுமதி கிடைத்தவுடன் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நெல்லையப்பர் கோவிலில் செயல்படுத்தப்படும். மழைக்காலத்திலும் அதாவது 15 டிகிரி செல்சியசிலும் கூட 75 சதவீதம் மின் உற்பத்தி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications