சட்டசபை மனுக்கள் குழு இன்று தூத்துக்குடியில் ஆய்வு: திமுக, தேமுதிக பங்கேற்குமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக அரசின் மனுக்கள் குழுவிற்கு அனுப்பப்பட்ட மனுக்களை ஆய்வு செய்கின்றனர். இதில் திமுக, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை பேரவை 11வது மனுக்கள் குழு கடந்த மே மாதம் 19ம் தேதி நியமனம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி்க்கு கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே மனுக்கள் குழுவிற்கு பொதுமக்கள் அளித்த மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. சங்கராபுரம் அதிமுக எம்.எல்.ஏ.வும், அரசு தலைமை கொறடாவுமான மோகன் குழுவின் தலைவராகவும், உறுப்பினர்களாக எம். எல்.ஏ.க்கள் மயிலாடுதுறை அருள்செல்வன்(தேமுதிக), திருத்துறைப்பூண்டி உலகநாதன்(இந்திய கம்யூனிஸ்ட்), உத்திரமேரூர் கணேசன்(அதிமுக), மொடக்குறிச்சி கிட்டுச்சாமி(அதிமுக), செங்கம் சுரேஷ்குமார்(தேமுதிக), தாராபுரம் பொன்னுச்சாமி(அதிமுக),நிலக்கோட்டை ராமசாமி(புதிய தமிழகம்), மன்னார்குடி ராஜா(திமுக), சங்ககிரி விஜயலட்சுமி பழனிச்சாமி(அதிமுக),
திண்டிவனம் ஹரிதாஸ் (அதிமுக), சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், துணைச் செயலாளர் இந்துமதி, சார்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் இந்த குழுவில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பது தெரியவில்லை. தலைவர் மற்றும் பேரவை செயலக செயலாளர்கள் மற்றும் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள். ஆனால் திமுக, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications