தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருது
ரமோன் மகசாசே விருது கடந்த 1957ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் 3வது அதிபரின் நினைவாக இந்த விருது ஆண்டுதோறும் சிறந்த சேவை நிறுவனம் அல்லது சேவையில் ஈடுபடும் நபருக்கு வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நிறுவனம் ரமோன் மகசாசே விருதை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது மணிலாவில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த குழந்தை பிரான்சிஸ்(65), தைவானைச் சேர்ந்த சென் ஷூ சு, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரொமுலோ டேவிட், வங்க தேசத்தைச் சேர்ந்த சையதா ரிஸ்வானா ஹசன், கம்போடியாவைச் சேர்ந்த யாங் சைங் கோமா, இந்தோனேசியாவைச் சேர்ந்த அம்ரோசியஸ் ருவின்ட்ரிஜாடோ ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மகசாசே விருது வழங்கும் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குழந்தை பிரான்சிஸ், கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் கடந்த 1979ம் ஆண்டு இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
அதன்மூலம் கிராமப்புற பெண்களின் வறுமையை போக்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த குழந்தை பிரான்சிஸ் உதவி செய்து வருகிறார். அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 8,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
குழந்தை பிரான்சிஸ்சின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் இந்த நிறுவனத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
பிரான்சிஸுடன் தைவான், பிலிப்பைன்ஸ், வங்கதேசம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கும் இந்த ஆண்டு மகசாசே விருது வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி மணிலாவில் நடக்கும் விழாவில் இந்த 6 பேருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.