அமர்நாத் யாத்ரீகர்களின் வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து: 16 பேர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் நேற்று இரவு பள்ளத்தில் விழுந்தது. இதில் அந்த டிரக்கில் இருந்த 16 பேர் பலியாகினர், மேலும் 16 பேர் காயம் அடைந்தனர்.
யாத்ரீகர்கள் 34 பேரை ஏற்றிக் கொண்டு டிரக் ஒன்று அமர்நாத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. அந்த டிரக் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டம் ஜமூரா மோர்ஹ் அருகே நேற்று இரவு 11.30 மணிக்கு சென்று கொண்டிருக்கையில் நிலை தடுமாறி ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 16 யாத்ரீகர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மேலும் 7 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
லேசான காயமடைந்த 2 யாத்ரீகர்கள் முதலுதவி அளித்த பிறகு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.
கடந்த 14ம் தேதி அமர்நாத்தில் இருந்து யாத்ரீகர்களுடன் புறப்பட்ட எஸ்.ஆர்.டி.சி. பேருந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்பன் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததில் 15 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications