ராணுவத்தை ஏன் உடனே அனுப்பலை?: மத்திய அரசை கேள்வி கேட்கும் அசாம் முதல்வர்
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் ஒரு வாரமாக வன்முறை நீடித்து வந்தும் சம்பவ இடங்களைப் பார்வையிடாமல் மோதலைக் கட்டுப்படுத்தாமல் இருந்ததற்கு மாநில முதல்வர் தருண் கோகாய்க்கு அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசை காட்டமாக தருண் கோகாய் விமர்சித்திருக்கிறார்.
குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய தருண் கோகாய் கூறியதாவது:
தற்போதைய மோதலில் 4 பேர் உயிரிழந்த போதே மத்திய அரசிடம் ராணுவத்தை அனுப்புமாறு கோரியிருந்தேன். அவர்கள் வந்து சேர 4 நாட்களானது. தற்போது அனைத்து இடங்களிலும் ராணும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசுக்கு உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தால் ஏன் ராணுவத்தை உடனேயே அனுப்பியிருக்கக் கூடாது? அப்படி அனுப்பியிருந்தால் இந்த அளவுக்கு வன்முறை வெடித்திருக்காதே?
போடோ இனத்தவருக்கும் வங்க மொழி பேசக் கூடிய குடியேற்றவாசிகளுக்கும் இடையேதான் மோதல் நிகழ்ந்தது. 7 நாள் மோதலில் மொத்தம் 45 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் அகதிகளாகி உள்ளனர். மொத்தம் 203 நிவாரண முகாம்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
பிரதமர் பயணம்
அசாம் மாநில மாநிலங்களவை உறுப்பினரான பிரதமர் மன்மோகன்சிங், மோதல் நிகழ்ந்த பகுதிகளை நாளை பார்வையிட உள்ளார். வரும் திங்கள்கிழமையன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பார்வையிட உள்ளார்.
மமதா ஏற்பாடு
மேற்குவங்கத்தின் எல்லையான கூச்பீகார் மற்றும் ஜல்பைகுரி பகுதிகளைக் கடந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் தஞமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து
அசாம் மோதலால் அங்கிருந்து வெளியேறி மேற்கு வங்க மாநிலத்துக்கு வரும் அகதிகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு எல்லையோர மாவட்ட நிர்வாகங்களுக்கு மேற்குவங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications