பனிமயமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: அமைச்சர் செல்லபாண்டியன் பங்கேற்பு
தூத்துக்குடி: உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திவ்ய சந்தமரிய தஸ்தேவிஸ் மாதா என்று அழைக்கப்படும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலாயம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இலங்கை, வளைகுடா நாடுகளிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இந்த ஆலயத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பேராலாய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கொடி பவனியும், தொடர்ந்து 3ம் திருப்பலியும் பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் நடந்தது.
பின்னர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கொடி புனிதப்படுத்துதல் நிகழ்ச்சியும், மக்களுக்காக மன்றாடும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்பு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பிஷப் அம்புரோஸ் கொடியேற்றி வைத்து உலக சமாதானத்தை வேண்டி புறாக்களை பறக்கவிட்டார். முன்னதாக பக்தர்கள் நேர்ச்சைக்காக கொண்டு வந்த பழங்கள், பால் ஆகியவை கொடி மரத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், மேயர் சசிகலாபுஷ்பா, ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பல்வேறு ஆலயங்களைச் சேர்ந்த பங்குதந்தைகள், முக்கியப் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருப்பவனி நடக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும், மதியம் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு பேராயர் பீட்டர் பெர்னான்டோ தலைமையில் ஆடம்பரத் திருப்பலியும், இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப் பவனியும் நடைபெற உள்ளது.