அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்

வலுவான லோக்பால் மசோதா வேண்டியும், ஊழலுக்கு எதிராகவும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால் இம்முறை அவர்களின் உண்ணாவிரதத்திற்கு போதிய ஆதரவு இல்லாமல் உண்ணாவிரத மைதானம் காற்று வாங்கியது. முன்னதாக 25ம் தேதியில் இருந்து 28ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மறுநாள் அதாவது 29ம் தேதி தான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ஹசாரே அறிவித்திருந்தார்.
ஆனால் அவரது கெடுவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தனது குழுவினர் மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்காமல் ஹசாரே இன்று காலை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். கடந்த 4 நாட்களாக காற்று வாங்கிய மைதானத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவரது உடல் நிலை பலகீனமாக உள்ளதால் அவர் உண்ணாவிரதமே இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வலுவான லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று ஹசாரே தெரிவித்துள்ளார். இதற்கிடையே அன்னா குழுவினரிடையே உள்ள பிரச்சனை வேறு பெரிதாகிக் கொண்டிருக்கிறது. பிரணாப் குடியரசுத் தலைவராகிவிட்டதால் அவரைத் தாக்கி பேசக் கூடாது என்று ஹசாரே தெரிவித்துள்ளதை ஏற்க அவரது குழு உறுப்பினரான ஜெக்ரிவால் மறுத்துள்ளார்.
இன்று மைதானத்தில் அன்னா கூறுகையில்,
வலுவான ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும். அந்த 15 ஊழல் அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் இருக்கும் வரையில் லோக்பால் மசோதா நிறைவேறாது. இதற்காக நான் என் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன் என்றார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த 15 பேர் இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications