கரூரில் ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபர் மகன் கடத்தல்
கரூர்: கரூரில் ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபர் மகன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்-திண்டுக்கல் சாலையில், தான்தோனிமலை மில் கேட் அருகே வாலிபர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று அந்த இரண்டு சக்கர வாகனத்தை மறித்துள்ளது. உடனே காரில் இருந்து இறங்கியவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் முகத்தில் துணியைப் போட்டு மூடி காரில் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவத்தைப் பார்த்த 10 வயது சிறுவன் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தான். சிறுவன் தெரிவித்த இடத்துக்கு டீக்கடைக்காரர் ஒருவர் சென்று பார்த்தபோது அங்கு இரண்டு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. இது பற்றி அவர் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி சோதனை நடத்தினார்.
அப்போது அந்த வாகனம் காமராஜபுரத்தில் உள்ள நூல்கடை அதிபர் தம்பிதுரைக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அநத வாகனத்தில் தொழில் அதிபரின் மகன் பிரவீன்குமார் (29) தான்தோன்றி மலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றது தெரிய வந்தது.
இந்நிலையில் தம்பிதுரை செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், உனது மகன் பிரவீன் குமாரை நீ உயிரோடு பார்க்க வேண்டும் என்றால் எங்களுக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரவீன் குமாரையும், அவரை கடத்திச் சென்ற நபர்களையும் வலை வீசித் தேடி வருகின்றனர்.
தொழில் அதிபர் மகன் கடத்தப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications