திமுக நிர்வாகி எஸ்.டி.உகம்சந்த் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விவசாய நிலத்தில் மணல் திருடியது தொடர்பாக விசாரணை நடத்தி திமுக நிர்வாகி எஸ்.டி. உகம்சந்த் மீது 6 வாரத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு நகர அதிமுக மாணவர் அணி துணைத் தலைவர் என்.சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மதுராந்தகம் திமுகவைச் சேர்ந்த எஸ்.டி. உகம்சந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆகியோர் விவசாய நிலத்தில் 7,000 லாரிகளுக்கு மேல் மணல் திருடியுள்ளார். அதன் இன்றைய மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் ஆகும்.
இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக ஆட்சியில் நாங்கள் எல்லாம் எவ்வளவோ போராடியும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதன் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.பி.யிடம் மனு கொடுத்தோம். அதன் பிறகு தான் எங்களுக்கு உண்மை நிலைமை தெரிய வந்தது.
திமுக ஆட்சியில் எஸ்.டி உகம்சந்த் பண பலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி பல முறைகேடுகள் செய்துள்ளார். இது குறித்த வழக்கை கடந்த 1.10.2009 அன்று எங்களுக்குத் தெரியாமல் முடித்துவிட்டனர். பிறகு நாங்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி திமுக நிர்வாகி எஸ்.டி.உகம்சந்த் மீது 6 வாரத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications