வடமாநில திடீர் கரண்ட் கட்டே எங்களுக்கு கூட்டம் வரக்கூடாதுன்னு செய்யப்பட்ட சதி: அன்னா ஹசாரே குழு
டெல்லி: நாட்டின் வடக்கு மின்தொகுப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு என்பது தங்களுக்கு எதிரான சதி என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
வலுவான லோக்பால் மசோதா, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் கோரி அன்னா ஹசாரே குழுவினர் கடந்த ஒருவாரகாலமாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் அன்னா ஹசாரேயும் இணைந்திருக்கிறார்.
டெல்லி ஜந்தர்மந்தர் அருகே நடைபெற்று வரும் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் குமார் விஸ்வாஸ் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் தங்களது போராட்டத்தில் மக்கள் பங்கேற்க வருவதைத் தடை செய்வதற்காகத்தான் மின்சாரத்தை துண்டித்திருக்கின்றனர் என்றார். மேலும் அரசாங்கம் மின்சாரத்தை துண்டித்தாலும் ரயில் சேவையை நிறுத்தினாலும் தங்களது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிப்பர் என்றும் கூறியுள்ளனர்.
செய்தியாளர்கள் மீதான தாக்குதல்
இதனிடையே செய்தியாளர்கள் மீதான அன்னா ஹசாரே குழுவின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அன்னா ஹசாரே, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியதானது. இனிமேல் செய்தியாளர்களிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளக் கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் நான் என் உண்ணாவிரதப் போராட்டத்தையே நிறுத்திவிடுவேன். அதே நேரத்தில் ஊடகங்களும் சரியான முறையில் செய்தியை வெளியிட வேண்டும் என்றார்.
அதே நேரத்தில் அன்னா குழுவைச் சேர்ந்த ஹெஜ்ரிவால், செய்தியாளர்கள் மீது எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால் சில ஊடகங்களின் ஆசிரியர்கள்தான் இந்த விவகாரங்களுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
இதேபோல் அன்னா குழுவின் மற்றொரு உறுப்பினரான சாந்தி பூஷனும், ஊடக முதலாளிகள்தான் செய்தியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். செய்தியாளர்களிடம் எங்களது குழுவினர் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் ஊடக முதலாளிகள் நாட்டின் பக்கம்தான் நிற்க வேண்டும் என்றார்.
ஆனாலும் ஊடகங்களுக்கு எதிராகத்தான் அன்னா ஹசாரே குழுவினரின் உண்ணாவிரதத்தின் போது தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications