சென்னையில் காலரா நோய் பரவியிருப்பதால் ஜெ. கொடநாட்டில் பதுங்கல்-ஸ்டாலின்

ஆர்ப்பாட்ட மேடையில் கழிவு நீர் கலந்த குடிநீர் பாட்டில்களில் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பலர் கொசுவலை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
வட சென்னை, தென் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், சென்னையில் பரவி வரும் காலரா, வாந்தி பேதியை கட்டுப்படுத்தவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு தலைமை ஏற்பது ஒரு மேயர். அந்த மேயருடைய அலட்சியப் போக்கை கண்டித்து நடைபெறக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மேயராக இருந்த நான் தலைமை தாங்கினேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பியவர் மா.சுப்பிரமணியன் அவரும் முன்னாள் மேயர்.
முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாட்டிலேயே இருக்கிறார். ஏறத்தாழ ஒரு மாதத்தையும் தாண்டி அவர் கொடநாட்டில் இருக்கிறார். ஒரு முதல்வர் இப்படி இருக்கலாமா என்று நாம் விமர்சிக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் இன்றைக்கு என்னத் தோன்றுகிறது என்று கேட்டால், சென்னையில் இப்படியொரு காலரா நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே சென்னையை விட்டு நாம் அங்கே போய் இருக்கலாம் என்று அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.
அதனால்தான் இடையிலே ஒரே ஒரு நாள் வந்துவிட்டு உடனடியாக ஓடியிருக்கிறார். இப்போதும் கூட இன்னும் ஒருமுறை வர இருக்கிறார். ஆகஸ்ட் 15ல் கொடியேற்றுவதற்காக வரப்போகிறார். ஆகவே ஏற்கனவே ஒருமுறை வந்துவிட்டு போனதற்கு பத்திரிகையில் செய்தி போட்டார்கள். முதல்வசர் கொடநாடு திரும்பினார். அடுத்து ஆகஸ்ட் 15 வந்துவிட்டு திரும்புகிறபோது, மீண்டும் கொடநாடு திரும்பினார் என்று செய்தி வரப் போகிறது. அதனால்தான் எனக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் நம்முடைய ஆர்ப்பாட்டத்தைப் பொறுத்தவரையில், சென்னை மாநகராட்சியை காப்பாற்ற வேண்டும். மாநகராட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களை காப்பற்ற வேண்டும். நோய், நொடிகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். எனவே மாநகராட்சி தனது பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று வலியுறுத்தக் கூடிய வகையிலே, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே 4 பெரிய மாநகராட்சிகள் உண்டு. டெல்லி-, மும்பை, கொல்கத்தா, சென்னை. இந்த 4 மாநகராட்சிகளில் சென்னை அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் தலைநகராமாக இருப்பது சென்னை. இந்த சென்னையில் இப்படிப்பட்ட ஒருநிலை ஏற்பட்டிருப்பதை எண்ணி, நாம் மிகுந்த அவமானத்திற்கு, அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.
கடந்த 15 நாட்களாக தொடர்ந்து பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கக்கூடிய செய்திகள் என்ன?. வாந்தி பேதி, மருத்துவமனைகளில் மக்கள் அனுமதி, காலராவிலே சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், காலரா தாக்கப்பட்ட காரணத்தினால் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அந்த செய்திகள் தொடர்ந்து பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது.
இந்த செய்திகளை பார்த்தாவது மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள், மாநகராட்சிக்கு தலைமை பொறுப்பேற்றிருக்கக்கூடிய மேயர், அந்த மாநகராட்சியை வழிநடத்தக்கூடிய அரசாங்கம் நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டிருக்க வேண்டும். எந்த ஒரு பணியிலும் அவர்கள் ஈடுபட்டதாக தெரியவில்லை.
நான் மேயராக இருந்த போது மக்களின் சேவகனாக பணியாற்றினேன். மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த போதும் போனில் தகவல் கிடைத்தாலே சம்பவ இடத்துக்கு உடனே சென்று பார்ப்போம். ஆனால் இப்போதைய மேயரோ பாதி நேரம் கோட்டையில் இருக்கிறார். மீதி நேரங்களில் எங்கே வலம் வருகிறார் என்று தெரியவில்லை.
என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில் இருந்து பல புகார்கள் வந்தன. அதில் குறிப்பாக, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. ஏறக்குறைய 70, 75 சதவீத கொளத்தூரில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சொன்னார்கள்.
கழிவுநீர் குடிநீரில் கலக்கப்படவில்லை. நோய்க்கு மக்கள் ஆளாக்கப்படவில்லை என்று ஒரு பக்கம் மேயர் அறிக்கை விடுகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒரு அறிக்கை விடுகிறார். இதனால் மக்கள் என்னிடம் தருகிற புகார்கள் உண்மைதானா என்று கொளத்தூரில் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். அப்போது மக்கள் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த குடிநீரை என்னிடம் காட்டினார்கள்.
இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தந்தீர்களா என்று கேட்டேன். எவ்வளவோ புகார் தந்தோம். பத்திரிகையில் தொலைபேசி எண்களையெல்லாம் போட்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் தெலைபேசியில் தொடர்புகொண்டால் யாரும் எங்களுக்கு பதில் தருவதில்லை. சில நேரங்களில் தொலைபேசியை யாரும் எடுப்பதில்லை என்று வேதனையோடு சொன்னார்கள்.
இதையெல்லாம் தொகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் புகார் அனுப்பி வைத்தேன். நான் கொளத்தூரில் ஆய்வு செய்த செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கொளத்தூர் தொகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த அக்கறை, இந்த புத்தி நான் போகுவதற்கு முன்பு ஏன் வரவில்லை. பொதுமக்கள் புகார் தந்ததும் வவராதது ஏன். இதுதான் நான் கேட்கிற கேள்வி.
பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கக் கூடியவர் ஒரு அறிக்கை தருகிறார். சென்னையில் காலரா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு ஒரு செய்தியை பரப்பி வருகிறார். யாரும் நம்ப வேண்டாம். சட்டமன்றத்திற்கு வராதவர். சட்டமன்றத்தில் பேசாதவர் என்றெல்லாம் பேசியிருக்கிறார். நீ சட்டமன்றத்தை ஒழுங்காக நடத்தினால் நாங்கள் வர மாட்டோமோ. சட்டமன்றத்தில் பேசுவதற்குக் கூட அனுமதி கிடையாது. அங்கு சட்டமன்றமா நடக்கிறது. பஜனை மடமாகத்தான் இருக்கிறது. ஒரு பொறுப்பான பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் மக்கள் பிரச்சனையை பற்றி சிந்திக்காமல், ஒரு அரசியல் நோக்கத்தோடு திரித்து அறிக்கை வெளியிடுகிறார் என்றால், நாங்கள் என்ன இல்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறோமா?.
மாநகரக தந்தை என்பது, சென்னை மாநகராட்சியின் முதல் குடிமகன். வணக்கத்திற்குரிய மேயர் என்று சொல்வார்கள். நான் வணங்கக்கூடிய மேயராக இருப்பேன் என்று சொன்னேன். தெருத் தெருவாக வரவில்லையா?. குறைகளை கேட்கவில்லையா?. சரி செய்யவில்லையா?. குடிநீர் பிரச்சனையா, இது மாநகராட்சிக்கு சம்மந்தம் இல்லை என்று நான் என்றைக்காவது சொன்னது உண்டா. என்னைத் தொடர்ந்து மா.சுப்பிரமணியம் சென்னை மேயராக இருந்தாரே. நான் பல மேடைகளில் சொன்னதுண்டு, நான் அலைந்ததைவிட பல மடங்கு அலைந்தவர் மா.சுப்பிரமணியன் அவர்கள். யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், அதற்கு மதிப்பளித்து சரியான பதிலை தருவார். சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பிரச்சனைகளை கவனிக்கவில்லையா.
ஆனால், இப்போதைய மேயர் எப்படி இருக்கிறார்?. குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக சொன்னால் குடிநீருக்கும் மாநகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். திமுக ஆட்சியில் நாங்கள் இப்படி சொல்ல மாட்டோம். சென்னையில் வாந்தி- பேதி, காலரா பரவுகிறது என்று சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்காமல் மறுப்பு சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். காலராவை வைத்து அரசியல் நடத்தும் கட்சி திமுக கிடையாது.
காலரா பாதிப்பு இருப்பதாக அதிகாரிகளே சொல்கிறார்கள். காலரா இல்லை என சவால் விட்டு மேயர் பேசுவதற்கு நாங்களும் பதில் சவால் விட்டு எங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், மக்கள் நலனில் அக்கறை எடுத்து தான் கேட்கிறோம். எங்கள் சவாலை ஏற்க தயாரா?
நாளையே ஒரு குழு அமையுங்கள். அதில் ஒரு கட்சிக்கு ஒரு பிரதிநிதி மற்றும் பத்திரிகையாளர் பிரதிநிதிகளையும் இடம் பெற செய்து குழு அமையுங்கள். நீங்கள் சொல்லும் பகுதிக்கு குழு வந்து பார்வையிட தயார். காலரா இருக்கிறதா, இல்லையா என்பது அப்போது தெரிய வரும். இல்லை என்றால் நாங்கள் சொல்லும் பகுதிக்கு நீங்கள் வாருங்கள். காலரா இருப்பதை நிரூபித்து காட்டுகிறோம்.
வியாதி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம். நாங்களும் அழைத்துக் கொண்டு போகிறோம். நீங்கள் குழுவை அமைக்கவில்லை என்றால், நாங்கள் அமைக்கிறோம். அழைக்கிறோம் வருவீர்களா? இதனை போட்டியாக நான் கேட்கவில்லை. மக்கள் பிரச்சனை தீர வேண்டும் என்பதைதான் வலியுறுத்துகிறேன்.
காலரா பிரச்சனையில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளாட்சித்துறை அமைச்சர் தயாரா? நாங்கள் போராட்டத்துக்கான வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருக்க மாட்டோம். வரும் போராட்டங்களை விட்டு விடவும் மாட்டோம் என்றார் ஸ்டாலின்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்தது.
திமுக பீனிக்ஸ் பறவை:
முன்னதாக நேற்று திருவள்ளூரில் திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நில அபகரிப்பு என்ற வழக்கு போடுகின்றனர். என் மீதும் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
திமுக ஆட்சியில் தொழில் புரட்சி நடைபெற்றது. 11 மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று 2ம் ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார். தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என்று விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.
மக்களைப் பற்றி கவலைப்படாததால் அரசு கோப்புகள் தேங்கி கிடக்கின்றன. ஆட்சி மாறி ஒரு வருடம் மேல் ஆனாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது திமு. தமிழக மக்களை காப்பாற்ற திமுக பீனிக்ஸ் பறவை போல் எழுந்து நிற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications