மதுரை தனியார் மருத்துவமனையில் +2 மாணவியை கற்பழித்த டாக்டருக்கு 15 நாள் காவல்
மதுரை: மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பிளஸ் டூ மாணவியை கற்பழித்த டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ரிஷபம் கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது பெண் தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டார். இதையடுத்து இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே அவரது தாத்தாவும், மாமாவும் விடுதிக்கு வந்து அவரை மதுரை, சொக்கலிங்கம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சங்கரநாராயணன்(52) தேவிக்கு டைபாய்ட் காய்ச்சல் போன்று உள்ளது என்றும், 3 நாட்கள் தொடர்ச்சியாக குளுகோஸ் ஏற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் தேவியை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குளுகோஸ் ஏற்றினர். நேற்று முன்தினம் 3வது நாளாக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. குளுகோஸ் ஏறிக் கொண்டிருக்கையில் அவரது தாத்தாவும், மாமாவும் பழங்கள் வாங்க கடைக்கு சென்றனர். அந்த நேரத்தில் டாக்டர் சங்கரநாராயணன் தேவியை கற்பழித்துள்ளார்.
இதனால் தேவி அலறியதால் யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அவர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த நேரம் பழங்கள் வாங்கச் சென்றவர்களும் திரும்பி வர தேவி அவர்களிடம் நடந்ததைக் கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் டாக்டரை சத்தம் போட்டனர். இதற்கிடையே மருத்துவமனை முன்பு ஏராளமான மக்கள் கூடினர்.
அடி, உதை விழும் என்று அஞ்சிய டாக்டர் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டாக்டரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வராததையடுத்து கதவை உடைத்து டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று காலை மதுரை 5வது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 14ம் தேதி வரை காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் மாரீஸ்வரி உத்தரவிட்டார்.
அப்போது பேசிய டாக்டர், நான் ஒரு டாக்டர், வருமான வரி செலுத்துபவன். அதனால் எனக்கு சிறையில் முதல் வகுப்பு வேண்டும் என்றார். சிகிச்சைக்கு வந்த சிறுமியை கற்பழித்தவருக்கு முதல் வகுப்பு வழங்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் பிற கைதிகளுடன் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தேவிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டருக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.