நெல்லையில் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் சேர்நது கொண்டாடிய கந்தூரி விழா
நெல்லை: நாங்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாராயணம் மேத்தா பிள்ளை அப்பா தர்காவில் நடந்த கந்தூரி விழாவை இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து கொண்டாடினர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தெற்கு விஜயநாராயணம் மேத்தா பிள்ளை அப்பா தர்காவில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 16ம் தேதி கந்தூரி விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு மேத்தா பிள்ளை அப்பா வாழ்ந்த வீட்டிலிருந்து கம்பத்துடன் கூடிய கொடி எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது இந்துக்களும், இஸ்லாமியர்களும் கொடி கம்பத்திற்கு சந்தனம் பூசி மாலையிட்டு மரியாதை செலுத்தினர். பின்னர் தார்காவில் உள்ள வேப்பமரத்தில் கொடியை ஏற்றி வழிப்பட்டனர்.
இவ்விழாவில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் முதல் மரியாதை கொடுத்து சிறப்பித்தனர். மாலை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது. இரவில் சிறப்பு தொழுகையும், கந்தூரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. சிறப்பு தொழுகையில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து கொண்டாடிய இந்த கந்தூரி விழா மதநல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications