ரயில் விபத்தில் 2 பெண் சாப்ட்வேர் என்ஜினியர்கள் பலி
சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணிபுரிந்த 2 பெண் சாப்ட்வேர் என்ஜினியர்கள் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் வாரங்கலைச் சேர்ந்த ஹனுமந்தரெட்டி என்பவரின் மகள் டி.ஷாலினி (23). அதே ஊரைச் சேர்ந்த ஹரிஹர சாரி மகள் டி.சிந்துஜா. அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் என்ஜினியர்களாக பணியாற்றி வந்தனர். ஷாலினி, சிந்துஜா மற்றும் அவர்களின் தோழி பிரசாந்தி(23) ஆகியோர் இன்னொரு தோழி ஒருவரின் நிச்சயதார்தத்தில் கலந்து கொள்ள ஆந்திராவுக்கு சென்றனர். அங்கு கரீம் நகரில் நடந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுவிட்டு அந்த 3 பேரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 11 பெட்டியில் சென்னைக்கு புறப்பட்டனர்.
அந்த ரயில் நெல்லூரில் தீப்பிடித்தபோது சிந்துஜாவும், பிரசாந்தியும் காயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஆனால் தூங்கிக் கொண்டிருந்த ஷாலினி தீயில் கருகி பலியானார். முதலில் ஷாலினி உயிருடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் எரிந்து கரிக்கட்டையாகக் கிடந்த உடல்களில் ஒன்றின் கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பார்த்து அது ஷாலினி என்று அடையாளம் காணப்பட்டது. தங்கள் தோழி இப்படி இறந்து கிடந்ததைப் பார்த்த அந்த இருவரும் கதறி அழுதனர். ஷாலினியின் உடலை அவரது பெற்றோரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
விஜயவாடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீதரின் மகள் அஷ்வினி(23). அவரது உறவினர் சம்பத்(22). அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள கமப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர்களாக பணியாற்றி வந்தனர். அவர்கள் இருவரும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு தீ விபத்து ஏற்பட்ட அதே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்தனர். ரயில் தீப்பிடித்தவுடன் அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும், இங்கும் ஓடினர். அதில் இடிபாடுகளில் சிக்கி அஷ்வினி உயிர் இழந்தார். சம்பத் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அஷ்வினியின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த வெங்கட்பாபு என்பவர் டெல்லியில் கம்ப்யூட்டர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவர் தனது மனவை வீணா, மகன்கள் ஹர்ஷித்(3) மற்றும் கௌசிக்(1) ஆகியோருடன் டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். ரயில் தீப்பிடித்தவுடன் படுகாயமடைந்த வீணா கௌசிக்குடன் வேறு பெட்டிக்கு ஓடிவிட்டார். அதனால் அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர். ஆனால் பாபுவும், ஹர்ஷித்தும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications