ரயில் விபத்தில் பலியான நெல்லையைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் அடக்கம்
நெல்லை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் பலியான நெல்லையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரில் 4 பேரின் உடல்கள் இன்று அதிகாலை அவர்களது சொந்த ஊரான முத்துமாலைபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஐந்தான்கட்டளை பஞ்சாயத்திற்கு உட்பட்ட முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். அவரது மனைவி கனகஜோதி. அவர்களது மகள் பொன்மணிக்கும்(30) மானூர் அருகேயுள்ள வாகைகுளத்தைச் சேர்ந்த எலிசபெத் மகன் டேவிட் ராஜாவுக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது.
டேவிட்ராஜா தற்போது கான்பூரில் எல்லைப் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். அந்த தம்பதிக்கு ரோஸி(7), ஜாஸ்மின்(4) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைக்கு டேவிட் ராஜா ஊருக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு 15 நாட்கள் தான் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் அவர் ஊருக்கு வரவில்லை.
இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு எலிசபெத்(52), பொன்மணி(30), ரோஸி(7), ஜாஸ்மின்(4), பொன்மணியின் தம்பி தவமணி(29) ஆகிய 5 பேரும் கான்பூர் சென்று டேவிட் ராஜாவுடன் விடுமுறை நாட்களை கழித்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியிலிருந்து புறப்பட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு வந்தனர். அந்த ரயில் நெல்லூர் அருகே செல்கையில் எஸ் 11 பெட்டியில் தீப் பிடித்தது. இதில் அந்த பெட்டியில் இருந்தவர்களில் 32 பேர் பலியாகினர்.
இதி்ல் டேவிட் ராஜாவின் குடும்பத்தார் 5 பேரும் பலியாகினர். விபத்து பற்றி அறிந்த அவர் உடனே கான்பூரில் இருந்து விமானம் மூலம் நெல்லூர் விரைந்து தனது குடும்பத்தாரின் உடல்களை அடையாளம் காட்டினார். ஆனால் அவரது தாயார் எலிசபெத் உடலை ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும் சொந்தம் கொண்டாடினார். இதனால் எலிசபெத் உடலை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு பின்பே எலிசபெத் உடல் ஒப்படைக்கப்படும் என டேவிட் ராஜாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிறகு அவர் தனது மனைவி பொன்மணி, குழந்தைகள் ரோஸி, ஜாஸ்மின், மைத்துனர் தவமணி ஆகியோரின் உடல்களை மட்டும் பெற்றுக் கொண்டு நேற்று காலை 8 மணிக்கு நெல்லூரில் இருந்து ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர்களின் உடல்கள் இன்று அதிகாலை நான்கு மணிக்கு முத்துமாலைபுரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.