என்.எல்.சி. நிறுவனத்தில் ஒரே நாளில் பணி ஓய்வுபெற்ற சூரியன் - சந்திரன்
நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தின் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்த தீயணைப்புத்துறை ஊழியர்களான சூரியன், சந்திரன் இருவரும் 32 ஆண்டுகள் ஒன்றாகவே பணிபுரிந்து ஜூலை 31-ந் தேதி ஓய்வு பெற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம் முட்லூரைச் சேர்ந்த தெய்வநாயகத்தின் மகன் சூரியன். 12.07.1952-ம் ஆண்டு பிறந்து 01.01.1981 ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தில் தீயணைப்புத் துறையில் பஃயர்மேனாக பணியில் சேர்ந்து தற்போது அஸிஸ்டெண்ட் ஆபீசராக ஓய்வுபெற்றுள்ளார்.
அதேபோல் வந்தவாசி தாலுக்கா தெரக்கோடி கிராமத்தைச் சேர்ந்த பூபாலநயினார் மகன் சந்திரன் 11.07.1952-ம் ஆண்டு பிறந்து 01.01.1981 ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தில் தீயணைப்புத் துறையில் பஃயர் மேனாக பணியில் சேர்ந்து தற்போது அஸிஸ்டெண்ட் ஆபீசராக ஓய்வுபெற்றுள்ளார்.
இருவரும் நெய்வேலியில் இருவேறு இடங்களில் வசித்து வந்தாலும் இருவரது வீட்டு எண்ணும் சி-12தான்! இருவரது பிறந்த தேதியில் ஒருநாள் முன், பின் இருக்கிறது. ஆனால் எதிரெதிரான இந்த சூரியனும் சந்திரனுக்கும் பல விஷயங்களில் ஒரே நாளில் அமைந்திருக்கின்றன.
என்.எல்.சி. வளாகத்தில் ஜூலை 31- ந் தேதி நடைபெற்ற விழாவில் இருவருக்கும் சிறப்பாக வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.