கங்கை ஆற்றில் தன்னைத் தள்ளி விட்ட அப்பா, சித்தி மீது சிறுமி போலீஸில் புகார்
டேராடூன்: தனது தந்தையும், சித்தியும், ரக்ஷா பந்தன் கொண்டாடலாம் என்று கூறி கங்கை ஆற்றுக்குக் கூட்டி வந்து அதில் தள்ளி விட்டு விட்டதாக 13 வயது சிறுமி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
உ.பியைச் சேர்ந்தவர் சீமா குமாரி. இவர் டேராடூன் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நான் எனது தந்தை, சித்தியுடன் ஹரித்வாருக்குப் போயிருந்தேன். ரக்ஷா பந்தன் என்பதால் அங்கு போய் வரலாம் என தந்தையும், சித்தியும் அழைத்ததால் போனேன்.
அங்கு கங்கை ஆற்றின் கரை மீது நின்றிருந்தபோது திடீரென எனது தந்தையும், சித்தியும் என்னை ஆற்றில் பிடித்துத் தள்ளி விட்டனர். பின்னர் நான் இறந்திருப்பேன் என்று கருதி போய் விட்டனர்.
நான் கடுமையாக போராடி, நீச்சலடித்து அருகில் இருந்த கரையில் ஏறினேன். அங்கு ஒரு சாதுவின் குடிசையில் இரவு நேரத்தை கழித்தேன். என்னைப் பிடித்து ஆற்றில் தள்ளி விட்ட தந்தை, சித்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் குமாரி.
இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.