ஏர் ஹோஸ்டஸாக சேர்ந்து துணைநிறுவனத்தின் டைரக்டரானவர் தற்கொலை: ஹரியானா அமைச்சர் மீது வழக்கு

ஹரியானா உள்துறை அமைச்சர் கோபால் கந்தாவுக்கு சொந்தமான எம்.டி.எல்.ஆர். ஏர்லைன்ஸில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஏர் ஹோஸ்டஸாக சேர்ந்தவர் கீத்திகா சர்மா(23). ஏர் ஹோஸ்டஸாக சேர்ந்த அவர் அந்நிறுவனத்தின் துணை நிறுவனமான சூப்பர்சோனிக்கின் டைரக்டராக உயர்ந்தார். அவர் கடந்த மாதம் வேலையை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று அதிகாலை வடமேற்கு டெல்லியில் உள்ள அசோக் விகார் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் சாகும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ஹரியானா உள்துறை அமைச்சர் கோபால் கந்தா தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கந்தா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கீத்திகாவின் சகோதரர் கௌரவ் கூறுகையில்,
என் சகோதரி எம்.டி.எல்.ஆர். ஏர்லைன்ஸில் பணிக்கு சேர்ந்த பிறகு கோபால் கந்தா அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து சென்றார். கடந்த மாதம் கீத்திகா தனது வேலையை ராஜினாமா செய்த பிறகு அவரை மீண்டும் வேலையில் சேருமாறு கந்தா வற்புறுத்தி வந்தார். அதற்கு அவர் மறுத்தார் என்றார்.
போலீசார் கூறுகையில்,
கீத்திகாவின் வீட்டுக்கு சென்றபோது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் பல தகவல்கள் கிடைக்கும் என்றனர்.
இதற்கிடையே போலீசார் கீத்திகாவின் செல்போன் மற்றும் டைரியை பறிமுதல் செய்து சோதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications