ஏர் ஹோஸ்டஸாக சேர்ந்து துணைநிறுவனத்தின் டைரக்டரானவர் தற்கொலை: ஹரியானா அமைச்சர் ராஜினாமா
டெல்லி: எம்.டி.எல்.ஆர். ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஏர் ஹோஸ்டஸ் கீத்திகா சர்மா வடமேற்கு டெல்லியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஹரியானா உள்துறை அமைச்சர் கோபால் கந்தா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஹரியானா உள்துறை அமைச்சர் கோபால் கந்தாவுக்கு சொந்தமான எம்.டி.எல்.ஆர். ஏர்லைன்ஸில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஏர் ஹோஸ்டஸாக சேர்ந்தவர் கீத்திகா சர்மா(23). ஏர் ஹோஸ்டஸாக சேர்ந்த அவர் அந்நிறுவனத்தின் துணை நிறுவனமான சூப்பர்சோனிக்கின் டைரக்டராக உயர்ந்தார். அவர் கடந்த மாதம் வேலையை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வடமேற்கு டெல்லியில் உள்ள அசோக் விகார் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் சாகும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ஹரியானா உள்துறை அமைச்சர் கோபால் கந்தா தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கந்தா மற்றும் அவரது நிறுவன மேனேஜர் அருணா சத்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கந்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடாவைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications