கர்நாடகத்தில் கனமழை: கபினி அணை வேகமாக நிரம்புகிறது.. மேட்டூர் அணைக்கு நீர்த் திறப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் காவிரி நதியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதைத் தொடர்ந்து கபினி அணையிலிருந்து உபரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவ மழை மிகத் தாமதமாக பெய்யத் தொடங்கியுள்ளது. தாமதமானாலும் தற்போது கன மழை பெய்து வருகிறது. முதலில் வட கர்நாடகத்தில் மட்டுமே தொடர் மழை பெய்தது. இதனால் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகள் வறண்டே கிடந்தன.
இந் நிலையில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்திலும், ஹாசன் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தலைக் காவிரியிலும், பாகமண்டலா உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை கொட்டுகிறது. இந்த மழை காரணமாக காவிரியில் வெள்ள நீர் வந்து சேர ஆரம்பித்துள்ளது.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 124 அடி உயர கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 88.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 18,967 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அதே போல பத்ரா, ஹேமாவதி, துங்கா ஆகிய 3 ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபினி, காஜனூர், ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகளும் நிரம்புகின்றன.
கபினி அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 2280.58 அடியைத் தாண்டிவிட்டது. அணை நிரம்ப 4 அடியே மிச்சமுள்ள நிலையில் உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்கள் கனமழை நீடித்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு வந்து சேரும்.
காவிரியில் ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகம் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அணைகள் நிரம்பி வருவதையடுத்து வேறு வழியில்லாமல் உபரி நீரைத் திறந்துவிடவுள்ளது.
கேரளத்தில் மதகுகள் இயங்காததால் பழசி அணை உடையும் அபாயம்:
இந் நிலையில் கேரளாவிலும் கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்யும் கன மழை காரணமாக வயநாடு மலைப் பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கண்ணனூர் மாவட்டத்தில் உள்ள பழசி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மதகுகளை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மோட்டார்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மதகுகள் இயங்கவில்லை.
தொடர்ந்து வெள்ள நீர் வந்து கொண்டே இருக்கும் நிலையில் மதகுகள் இயங்காததால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதகுகளை இயக்க ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.












Click it and Unblock the Notifications