குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்கம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்த சாரல் திருவிழா நேற்று துவங்கியது.
குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று துவங்கியது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜகிருபாகரன் வரவேற்புரையாற்றினார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் சரத்குமார், நாராயணன், முததுசெல்வி, பேரூராட்சி தலைவர் லதா அசோக் பாண்டியன், துணை தலைவர் கணேஷ் தமோதரன், கவுன்சிலர் குமார் பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசுகையில், குற்றாலம் அருவிகளில் அரியவகை மூலிகைகள் கலந்த தண்ணீர் விழுவதால் தான் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். குற்றாலத்திற்கு எத்தனை லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார். குற்றாலத்தில் எந்தவிதமான அத்துமீறல்களுக்கும் இடமில்லாமல் மகிழ்ச்சியாக குடும்பத்துடன வந்து செல்லலாம். சுற்றுலாப் பயணிகள் சீசனை அனுபவிப்பதுடன் சாரல் திருவிழாவை கண்டு மகிழ வேண்டும் என்றார்.
சரத்குமார் பேசுகையில், குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கும், சுற்றுலா செல்வதற்கும் குற்றாலம் ஏற்ற வகையில் உள்ளது. தென்காசியில் ரிங் ரோடு விரைவில் அமைக்கப்படும். அருவிக்கரை பகுதியை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குற்றாலத்தில் சுற்றுலா தரத்தை உயர்த்தும் வகையில் ஐந்தருவியில் 6 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது என்றார்.
நேற்று மாலை துவங்கிய திருவிழா நாளையுடன் முடிகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது. திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications