சென்னையில் டெசோ மாநாடு நடத்த தமிழக அரசு திடீரென அனுமதி மறுப்பு

இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறுகையில்,
தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி கேட்டு அரசு துறையிடம் கடிதம் கொடுத்தார். அவரிடம் கடந்த 8ம் தேதி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தோம். டெசோ மாநாட்டுக்கு எத்தனை ஆயிரம் பேர் வருவார்கள். எத்தனை வாகனங்கள் வரும் என்பது பற்றி தகவல் தெரிவிக்கும்படி கேட்டு இருந்தோம்.
அதற்கு 9ம் தேதி ஜெ.அன்பழகன் பதில் கடிதம் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த பதிலில் டெசோ மாநாட்டுக்கு 10,000 பேர் வருவார்கள். சுமார் 1,000 வாகனங்கள் வரும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் டெசோ மாநாட்டை நடத்தும் தி.மு.க. தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் டெசோ மாநாட்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தினமும் செய்தி வெளியிட்டு வருகிறது.
பொதுப்பணித்துறையிடம் பெறப்பட்ட அறிக்கையின்படி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சுமார் 8,000 பேர்தான் இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணி நடப்பதால் ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை பகுதியில் சென்னை நகரின் 2-வது மிகப்பெரிய மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு தினமும் புறநோயாளிகளாக 3,000 பேர் வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக 1,000 பேர் இருக்கிறார்கள். மாநாடு நடக்கும் பட்சத்தில் இத்தகைய பணிகளில் எல்லாம் பாதிப்பு ஏற்படும். எனவே இதை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதிக்க இயலாது என்று முடிவு செய்துள்ளோம்.
டெசோ மாநாடு நடத்துபவர்கள் சென்னை நகருக்கு வெளியே வேறு எங்காவது நிகழ்ச்சியை நடத்துக் கொள்ள அனுமதி கேட்டால் அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கவேலு கூறுகையில், டெசோ மாநாடு நடத்த ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சன் வாதாடுகையில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் மாநாடுகள் நடத்தி உள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளும் அங்கு நடந்துள்ளன. மேலும் டெசோ மாநாட்டுக்கு அனுமதி கோரி நாங்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த கடிதம் மீது இன்னும் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த கடிதம் நிலுவையில் உள்ளது.
சென்னை மாநகர போலீஸ் சட்டப்படி தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த போலீசாரிடம் அனுமதி பெற தேவையில்லை என்றார்.
அப்போது பேசிய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மாநாட்டில் ஒலிபெருக்கி பயன்படுத்த போலீசாரிடம் அனுமதி பெற்றுதான் ஆக வேண்டும் என்றார்.
அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் ரவீந்திரன் குறுக்கிட்டு, மாநாட்டில் வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது என்றார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை யாரும் பயன் படுத்தக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது என்றார்.
அத்துடன் வழக்கறிஞர்களின் வாதம் முடிந்தது.
இதையடுத்து நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணு கோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பில்,
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி கோரி கொடுக்கப்பட்ட கடிதம் போலீஸ் கமிஷனர் முன்பு இன்னமும் நிலுவையில் உள்ளது. அதைப் பரிசீலித்து டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறையே எந்த முடிவையும் எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications