மடியில் கனமும் இல்லை, பயமும் இல்லை, கைது செய்து பாருங்கள்: விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
புதுக்கோட்டையில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதைப் பார்த்து தான் இங்கு நலத்திட்ட உதவி வழங்க முடிவு செய்தேன்.
நாங்கள் மக்களுக்கு நன்மை செய்வதை தடுக்க அதிமுக முயற்சிக்கிறது. மக்களே தெய்வம். அவர்களுக்கு உதவுவதைத் தடுப்பது பெரிய பாவம் ஆகும். அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் பேச்சைக் கேட்டு செயல்படக் கூடாது.
சிவகங்கங்கை அரசு மருத்துவமனையை சுத்தம் செய்ய நாங்கள் சென்றோம். அப்போது ஆளுங்கட்சியினர் மருத்துவமனை கதவுகளைப் பூட்டிவைத்து எங்கள் உள்ளே வரவிடாமல் தடுத்தனர். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பவதை அவர்கள் உணர வேண்டும்.
வெள்ளையனை விரட்டிய காலம் போய் தற்போது கொள்ளையனை விரட்ட வேண்டிய காலமாக உள்ளது. வறுமையை, ஊழலை ஒழிப்போம் என்று நான் கூறியபோது ஏளனமாகச் சிரித்தனர். ஆனால் இன்று நாடு முழுவதும் இந்த முழக்கம் தான் கேட்கிறது.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதுவரை உள்ள மின்தடைக்கு அதிமுகவும், திமுகவுமே காரணம். மணல் கொள்ளையால் ஆறுகள் எல்லாம் குளங்கள் போன்று காட்சியளி்க்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பிறகு யாரும் நிரந்தர வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவில்லை.
இடைத்தேர்தலின்போது புதுக்கோட்டையில் மின்தடையே இல்லாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் தற்போது? புதுக்கோட்டையை புதிய கோட்டையாக்குவேன் என்றவர்கள் எங்கே?
மத்தியில் எதிர்கட்சி பணியை அதிமுக செய்வதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் தேமுதிகவினரின் பணியைப் பார்த்து மட்டும் ஏன் கோபப்பட வேண்டும். மக்களுக்கு நல்லதை செய்ய துணிச்சல் வேண்டும். நல்லதை யார் செய்தாலும் நான் வரவேற்பேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் நிஜத்தில் எதுவும் நடக்கவில்லை. சுமார் 65 லட்சம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
தங்க நாற்கரச் சாலையை வாஜ்பாய் கொண்டு வரவில்லையா? அப்படி இருக்கையில் நதிகளை இணைக்க முடியாதா என்ன? பிரதமர் மக்களுக்கு செல்போன் வழங்குவதற்கு பதில் வேலை கொடுக்கலாமே. திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் லஞ்சம் புரையோடிவிட்டது. மடியில் கனமும் இல்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை. வழக்கு போடுவதைப் பார்த்து எல்லாம் நான் அஞ்சமாட்டேன். என்னை கைது செய்து பாருங்கள், சிறையைப் பற்றி நான் பயப்பட மாட்டேன்.
நூற்றாண்டு சாதனையை ஓராண்டில் செய்துவிட்டோம் என்கிறார்கள். அப்படி அவர்கள் என்ன சாதனைகளை செய்துவிட்டார்கள்?
இந்தியா ஒரு தீபகற்ப நாடு, அதிலும் தமிழகம் ஒரு தீபகற்ப மாநிலம். இங்கு நதிகள் இல்லை. நமக்கு வர வழங்க வேண்டிய நீரை அளிக்காமல் கேரளாவும், கர்நாடகமும் தமிழகத்தை வடிகாலாக மட்டுமே பயன்படுத்துகின்றன. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமே என்ற அக்கறை இல்லை. பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் மற்றும் மின் தடையால் மகக்ள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திமுக ஆட்சியை எதிர்த்து தாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கான கோரிக்கைகள் அனைத்தும் தங்கள் ஆட்சியில் நிறைவேறிவிட்டாத என்று அதிமுகவினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.