மலேசியாவில் விபத்தில் பலியான மகனின் சாவில் மர்மம்- கலெக்டரிடம் தாய் மனு!
நாகை: மலேசியாவில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வாலிபரின் தாய், நாகை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
நாகப்பட்டினத்தை அடுத்த திருப்பூண்டி, மேற்கு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சரோஜா. இவர்களின் 4 மகன்களில் ஒருவரான விஜயராகவன்(28), ஏசி மெக்கானிக். கடந்த 2010ம் ஆண்டு முதல் மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி மலேசியாவில் இருந்து அழைத்த விஜயராகவன், தனது தாய் சரோஜாவிடம் தனக்கு லாட்டரியில் 1.10 கோடி பரிசு அடித்துள்ளதாகவும், கடந்த 9ம் தேதி ஊருக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜயராகவனின் நண்பர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரபாகரனிடம் இருந்து போன் வந்தது. அவர், முதலில் விஜயராகவன் தனது வீட்டிற்கு வந்ததாகவும், அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு மீண்டும் அழைத்த பிரபாகரன், கார் விபத்தில் விஜயராகவன் பலியானதாக தெரிவி்த்தார்.
இதை கேட்டு சநதேகமடைந்த சரோஜா, தனது மகன் விஜயராகவனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், நாகை கலெக்டர் முனுசாமியிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து சரோஜா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
எனது மகன் கடந்த 5 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை பார்த்து வந்தான். கடந்த 5ம் தேதி இரவு 1.45 மணியளவில் எனக்கு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் எனது மகன் விஜயராகவன் கார் விபத்தில் இறந்துவிட்டதாக கூறினார். செய்தியைக் கேட்டு நான் அன்று முதல் பதற்றத்துடன் அழுதுக் கொண்டிருந்தேன்.
மறுநாள் எனக்கு மீண்டும் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் முன்தினம் பேசிய அதே நபர் கூறும் போது, உங்கள் மகன் உடலை மலேசியாவில் இருந்து அனுப்ப வேண்டும். அதனால் உங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் கடிதம் வாங்கி அனுப்புங்கள் என்று கூறினார். நானும் கிராம நிர்வாக அலுவலரிடம் கடிதம் வாங்கி அனுப்பினேன்.
எனக்கு என் மகன் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் உள்ளது. கடந்த 5ம் தேதி மாலை 3 மணியளவில் விஜயராகவன் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மலேசியாவில் லாட்டரி குலுக்களில் இந்திய மதிப்புபடி ரூ.1 கோடியே 10 ஆயிரம் பரிசு விழுந்துள்ளதாக கூறினார்.
கடந்த 7ம் தேதி வேறொரு நபர் என்னை போனில் தொடர்புக் கொண்டு லாட்டரியில் விஜயராகவனுக்கு பரிசு விழுந்துள்ளதால் அதனை சிலர் பிடுங்கி கொண்டு மதுபானத்தில் விஷம் கலந்து கொலை செய்து விட்டார்கள் என்று கூறினார். இதுவரை எனது மகன் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ஒரு முறை கூட என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை.
எனவே எனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. எனவே என் மகன் சாவு குறித்து புலனாய்வு மேற்கொண்டு, உண்மையை கண்டறிந்து எனது மகனின் உடலையும், நஷ்ட ஈடும், இன்சூரன்சும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications