விளையாட்டு அரங்கம் இடிந்து 10 பேர் பலி விவகாரம்: ஜேப்பியார் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து 10 வட மாநிலத் தொழிலாளர்கள் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் ஜேப்பியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரம், குன்னம் கிராமத்தில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி செயல்பட்டு வருகின்றது. கல்லூரியின் கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை கட்டிடத்தின் தூண் சரிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 50 வட மாநிலத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் ஒரிசா, அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியாயினர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார் கட்டிடப் பொறியாளர்கள் ராஜ்குமார், அன்புரோஸ், மேஸ்திரி சதானந்தம், கல்லூரியின் இயக்குனரும், ஜேப்பியார் மருமகனுமான மரியவில்சன் ஆகிய 4 பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அதே போல ஜேப்பியார் மீதும் வழக்குப் பதிவு செய்து அவரையும் வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜேப்பியார் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஜெகதீஸ் சந்திரா, காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 2ல் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் வாதிடுகையில், கல்லூரி நிறுவனர் சம்பவ இடத்தில் இல்லை. எனவே, இந்த விபத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி அனுமதி இன்றி, அவசரமாக உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பு கவசம் இன்றி வேலை செய்துள்ளனர். தரமற்ற பொருட்களால் கட்டிடம் கட்டியதால் அது இடிந்து விபத்து நடந்துள்ளது. விபத்துக்கு காரணமானவர்களை ஜாமீனில் விடக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோமசேகர், ஜேப்பியாருக்கு சமூகத்தில் அதிகார பலம் இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்பதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications