ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட பாபா ராம்தேவ்
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவும், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்றக் கோரியும் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 9ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிவிக்குமாறு கூறி மத்திய அரசுக்கு அவர் 72 மணிநேரம் கெடு விதித்திருந்தார். ஆனால் அரசு அவரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறி்த்து கடந்த 11ம் தேதி மாலை அறிவிப்பதாக தெரிவித்தார். பின்னர் 12ம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிப்பேன் என்றார். ஆனால் இன்று 13ம் தேதியாகிவிட்டது அவர் இன்னும் தனது அடுத்த கட்ட போராட்டம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. மாறாக பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று மட்டும் கூறி வருகிறார்.
இந்நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப் போவதாக தெரிவித்தார். ஆனால் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இன்று அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது,
கறுப்புப் பணம் காங்கிரஸ் கட்சியினருடையது தான். அதனால் தான் அதை அவர்கள் தேசிய சொத்தாக்க மறுக்கின்றனர் என்று கிராமம் கிராமமாகச் சென்று மகக்ளிடம் தெரிவிப்போம். லோக்பால் மசோதா வந்தால் தங்களது அமைச்சர்கள் பலர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதால் தான் காங்கிரஸ் அந்த மசோதாவை நிறைவேற்ற மறுக்கிறது. மத்திய அரசை எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபடுவோம். அனைவரும் சிறைக்கு செல்ல தயாராகுங்கள் என்றார்.
இந்நிலையில் ராம்தேவின் போராட்டத்தை ஆதரிப்பது என்று பாஜக முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாஜக தலைவர் நிதின் கட்காரி ராம்லீலா மைதானத்திற்கு சென்று உரை நிகழ்த்தினார். முன்னதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி ராம்தேவின் போராட்டம் நடக்கும் இடத்திற்கு இன்று காலை சென்று உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் போராட்ட இடத்திற்கு வந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். காங்கிரஸை எதிர்த்து நிற்கும் ராம்தேவுக்கு பாஜக, ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தான் அறிவித்தவாறே ராம்தேவ் நாடாளுமன்றம் நோக்கி தனது பேரணியைத் துவங்கினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடவிருக்கின்றனர்.