நெல்லையில் திசை காட்டும் கருவியுடன் கிடந்த மர்ம பை: பரபரப்பு
நெல்லை: நெல்லையில் உள்ள செல்லப்பாண்டியன் சிலை அருகே கிடந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது.
சுதந்திரதினத்தையொட்டி மக்கள் கூடும் முக்கிய இடங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் மைய பகுதியில் உள்ள செல்லப்பாண்டியன் சிலை அருகே சில அடி தூரத்தில் உள்ள பிளாட்பாரத்தில் கறுப்பு நிற மர்ம பை கிடந்தது.
விடுமுறை தினம் என்பதால் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக ஏரளாமான மக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்ற இடத்தில் கிடந்த அந்த மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிலர் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று அந்த பையை தயக்கத்துடன் எடுத்து திறந்து பார்த்தனர். அதில் ஒரு பென் டிரைவ், திசை காட்டும் சிறிய கருவி, நாகராஜன் என்ற பெயரில் மின்வாரியத்தில் தீர்வை கட்டிய ரசீது, மற்றொரு பெயரில் மின்வாரிய ரசீது, டிபன் பாக்ஸ், சாவி மற்றும் ஆடவர் உள்ளாடை ஆகியவை இருந்தது. பைக்கில் அந்த வழியாக சென்ற யாராவது தவற விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மர்ம பையின் உரி்மையாளர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.