சென்னையில் மப்பில் தகராறு செய்த கணவரை கை, கால்களை கட்டி எரித்துக் கொன்ற மனைவி
சென்னை: குடித்துவிட்டு தகராறு செய்த கணவனின் கை, கால்களை கட்டி அவரை எரித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருவேற்காடு கோலடி அன்பு நகரைச் சேர்ந்தவர் கொத்தனார் சக்திவேல் (39). அவரது மனைவி பிருந்தா (35). கீரை வியாபாரி. அவர்களுக்கு பானுப்பிரியா (15) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். பானுப்பிரியா திருவேற்காட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். குடிப்பழக்கம் உள்ள சக்திவேல் அடிக்கடி போதையில் வந்து பிருந்தாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்வதும், அவர்களை அக்கம்பக்கத்தினர் வந்து விலக்கிவிடுவதும் வழக்கம்.
இந்நிலையில் நேற்று ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பிருந்தார் தனது வீட்டில் கூல் ஊற்றி பூஜை செய்தார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு குடிபோதையில் வந்த சக்திவேல் வழக்கம் போன்று மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் மனைவியை அசிங்கமாகத் திட்டியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் செல்வராஜ் என்பவர் ஓடி வந்து சக்திவேலை கண்டிதுள்ளார்.
ஆனால் சக்திவேலோ மனைவியை அடிக்க முயன்றார். உடனே பிருந்தா, தனது மகள் பானுப்பிரியா மற்றும் செல்வராஜுடன் சேர்ந்து அவரது கை, கால்களை கட்டி அமர வைத்தார். அதன் பிறகு செல்வராஜ் அவரது வீட்டுக்கும், பானுப்பிரியா உறவினர் வீட்டுக்கும் சென்றுவிட்டனர். பிருந்தா சமையல் செய்ய சென்றார். கை, கால்கள் கட்டப்பட்டிருந்தும் அவர் பிருந்தாவை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.
அவர் திட்ட திட்ட ஆத்திரமடைந்த பிருந்தா மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது கணவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு உறவினர் வீட்டுக்கு கிளம்பிவிட்டார். இதற்கிடையே அவர்களின் வீட்டில் இருந்து புகை வந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீ விபத்து தான் ஏற்பட்டுவிட்டதோ என்று நினைத்து பிருந்தாவுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அவர் மெதுவாக வந்து கதவைத் திறந்தபோது சக்திவேல் கருகி பிணமாகக் கிடந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்று பிருந்தா நாடகமாடினார். இது குறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறி்த்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கை, கால்கள் கட்டப்பட்டவர் எப்படி தீககுளித்து தற்கொலை செய்ய முடியும் என்று நினைத்த போலீசார் பிருந்தாவைப் பிடித்து விசாரித்ததில் உண்மை வெளியே வந்தது.
இதையடுத்து பிருந்தா கைது செய்யப்பட்டார். மேலும் செல்வராஜ் மற்றும் பானுப்பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த சக்திவேல் கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் திருவேற்காட்டில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.